Pages

Tuesday, September 8, 2009

வெள்ளெருக்கு- முந்திரிக்காட்டின் அந்தரங்கம்

மனிதர்களின் மனம் எப்போதும் இழந்ததை நினைத்து ஆயாசப்படும். மண்ணையும் உறவுகளையும் இழந்து தவித்து துன்பப்படும் மனதைக் கொண்டிராதவர்கள் உலகில் எத்தனை பேர்? துன்பங்களின் சுவடுகள் எப்போதும் கடந்து வந்த பாதையை மறக்கச் செய்வதில்லை. ஏதோவொன்றை இலக்கு வைத்து எழுதப்படும் எழுத்தை இலக்கியம் என்று கொண்டால் அவ்வாறு எழுதப்படும் ஒவ்வொரு கதையும் இலக்கியத்தின் எல்லைக்குள் நின்று நிலைப்பவை எனலாம். துன்பியல் நாடகங்களும், கதைகளும், நாவல்களும் என்றும் நிலைத்து நம் மனதின் ஆறாத பக்கங்களில் உள்ள தழும்புகளை நிரண்டிப் பார்க்கின்றன. அது சில வேளைகளில் மீண்டும் திறந்து பார்க்க நினைக்காத நம் மனக் கதவுகளை சற்றே திறக்க வைத்து உள்ளிருக்கும் அன்பு, கோபம், இரக்கம் எனக் கசிய வைக்கிறது.

கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு' சிறுகதைத் தொகுப்பை படித்தபோது இந்த உணர்வே ஏற்பட்டது. தமிழினி வெளியீடான இத் தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. விருத்தாசலம், விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளில் வாழும் கிராம மக்களின் கதையை வட்டார மொழிநடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

சீவனம்- இந்தத் தொகுப்பிலேயே மிகப்பிடித்த அழ வைத்த கதை இது. நகர நாகரிகமும், உலகப் பொருளாதாரத் தாக்கமும் கிராமத்தில் கூலி வேலை செய்பவனைக் கூட விட்டுவைக்காமல் அடித்து துவைத்து விட்டது என்பதைக் கூறும் கதை. விளைந்ததைக் கொண்டு செல்ல மாடு வேண்டும், மாட்டுக்கு வண்டி வேண்டும், வண்டியின் சக்கரத்துக்கு பட்டா போடுவார்கள். அதை பட்டறையில் வைத்து காய வைத்து அடித்து சீர் செய்து சக்கரத்தில் பொருத்துவார்கள். உலைக் களத்துக்கு கரி வேண்டும். கரி வாங்க காசு வேண்டுமே? எங்கே போவது.

"டயர் வண்டிகள் வந்த பிறகு, கொல்ல ஆசாரியை யாரும் ஏறெடுத்துப் பார்கவில்லை. வேலை முடங்கியது. வரும்படி குறைந்தது. வயிற்றில் சுருக்கம் விழுந்தது. உலைக்களம் கேட்பாரற்றுப்போய்விட்டது. எப்போதாவது சில்லறை வேலைக்கு, கூலிக்கு மல்லுக்கட்டி வாதாட வேண்டியிருக்கிறது'.

அப்போதுதான் வாராமல் வருகிறது சில்லறை வேலை. எங்கு கேட்டும் கரி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், கரியில்லை என்று திருப்பி அனுப்ப மனமில்லாமல் சுடுகாடு நோக்கி நடக்கிறார் ஆசாரி. அங்கே அவர் செய்யப் போகும் செயல் ஒரு கணம் வாழ்வின் மீளமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தும். அன்றைக்கு இறந்துபோன ஒருவனை எரித்த இடத்தை சுடுகாட்டில் தேடுகிறார். ஒரு விநாடி நிதானித்துவிட்டு கொண்டுவந்த சாக்கில், கீழே கிடக்கும் எரிந்து மீதியான கரித்துண்டுகளை எடுத்துப் போடுகிறார். அதில் எலும்பும் சேர்ந்தே வருகிறது. "மொத வேலயா ஊட்லபோய் கொட்டி, கெடக்கற எலும்புத் துண்டுவுள பொறுக்கி எட்டப் போடணும்'. என்று வேலை செய்யும் போது, "என்னா கரியில வெள்ளையா எலும்பு மாதிரி...' என்கிறான் எதிரில் இருப்பவன். "பைத்தியமா ஒனக்கு. பீங்கான் ஓடு' என்று வேகமாய் தூக்கி வேலிக்கு அந்தாண்ட எறிந்தான்.

வண்ணம்- ஆர்ட் கேலரிகளிலும், வழுவழு காகிதங்களில் அச்சான நவீன ஓவியங்களையும் பார்த்து பிரமிக்கும் கலா ரசிகர்களை சற்றே கிராமத்து ஓவியனின் பக்கம் திருப்புகிறது இக்கதை. கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்த வைக்கப்படும் சிலைகளுக்கு வண்ணம் அடிக்கும் தொழில் செய்கிறார் நடராஜ ஸ்தபதி. அவரிடம் தொழில் கற்றுக் கொள்ள விரும்பும் சிலம்பரசனுக்குக் கிடைப்பதோ கருப்பு வண்ணம் அடிக்கும் வேலை மட்டுமே.
"கருப்பு, கருப்பு எல்லாம் இருட்டாகவே போய்க் கொண்டிருந்தது வண்ணங்களைப் பற்றிய அவன் கனவு'. பயிற்சி பெறும் வரை கருப்பு பெயிண்ட் மட்டுமே அடிக்கக் கொடுக்கிறார் ஸ்தபதி. தனக்கு என்று உள்ள கனவை வெற்றி கொள்ள ஐயனார், வீரனார், குதிரை சிலைக்கு வண்ணக் கலவை அடிக்க ஒரு வாய்ப்பாவது கொடுக்கக் கூடாதா என்று வாய்ப்பை எதிர்நோக்கும் கிராமத்து ஓவியனின் மனம் சிலிர்க்க வைக்கிறது. வேறு தொழில் என்று பட்டறைக்குச் சென்றாலும் கருப்பு மை ஒட்டுகிறது உடலெங்கும். வண்ணமயமான வாழ்வை எதிர்பார்ப்பவனுக்கு வழிய வருவது கருப்பு மட்டுமே. செலம்புவின் மனம் கடைசியில், "இந்த கருப்புப் பெயிண்ட் இனி கையால நா தொடமாட்டன். எம்மாம் நாளைக்கி கருப்பு கருப்புன்னு அடிச்சிக்கிட்டுக் கெடக்கறது?' என்று ஸ்தபதியிடம் கோபப்பட வைக்கிறது. ஸ்தபதி சிரித்துக் கொண்டே, "சரி சரி, செவுப்பு பெயிண்ட எடுத்துக்கிட்டுப் போயி, ரெண்டு குதிரைக்கும் வாணியில அடி' எனும்போது பெரிய ஓவியனைப் போல் அவனுக்குள் ஒரு நிழல் விரிகிறது. தன் லட்சியத்தை அடையக் கிடைத்த துருப்புச் சீட்டு போல நினைத்து சிவப்பு பெயிண்டை மென்மையாக பூசியபோது கூச்சத்தில் நெளிகிறது குதிரை.

வெள்ளெருக்கு- அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புற பள்ளிக் கூடங்களில் ஆசிரியருக்கு வேலை செய்வதற்கென்றே சில மாணவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். சில நேரங்களில் பாடத் தொல்லையைத் தவிர்க்க அவர் எப்போது டீ வாங்கி வரச் சொல்லுவார், வீட்டுக்குப் போய் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுவார் என மாணவர்கள் காத்திருப்பார்கள் என்பது கிராமப் பள்ளியில் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆசிரியரின் ஆண் குழந்தைக்கு அரஞாண் கயிறு திரிக்க வெள்ளெருக்குச் செடியைத் தேடி அலையும் சிறுவர்கள் கதை. படிக்கும் போது நம் பால்யத்தின் கதவுகள் சற்றே திறந்து கொண்டு மனதினுள் காற்று வீசுவதைத் தடுக்க முடியவில்லை.

வனாந்திரம்- தாய், மகன் உறவு சொல்கிறது. கணவனை இழந்தவள் முந்திரி பயிர்களைப் பொறுக்கி விற்று பிழைப்பு நடத்துகிறாள். சிறுவயது மகனை வைத்துக் கொண்டு அவன் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் திணறுகிறாள். முந்திரிப் பயிறு குழம்பு கேட்டு நச்சரிக்கும் மகனுக்கு ஆசை தீர செய்து கொடுக்கிறாள். ஆனால் அவள் சாப்பிட மறுக்கிறாள்.
"என்னாம்மா ஒனக்காகத்தான் இம்மானையும் செய்ய சொன்னன். என்ன சாக்குட்டாவது, நீ நாலு வாயில போடுவன்னுதான இம்மாம் அடி அடிச்சிகிட்டன்...' அவனுக்கு குரல் கம்மியது. "இல்லப்பா, நாம்ப இருக்கற நெலையில, நாக்குக்கு ருசியா தேடனா அது ஒத்து வராதுப்பா. ஏதோ பச்சத் தண்ணியா இருந்தாலும், வவுறு நொம்புதான்னுதாம் பாக்கணும்'.
அவளுக்கு குரல் உடைந்து போயிருந்தது.

வலை- அக்கா இறந்துவிட்டால் தங்கைதான் இரண்டாந்தாரம் என்ற கிராமத்து பழக்கத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்ணின் கதை. எல்லோரும் முடிவெடுத்துவிட்டு அவளிடமும் ஒரு வார்த்தைக் கேட்க நினைக்கிறார்கள். "அப்புறம் நீ என்னம்மா சொல்ற' எனக் கேட்கும் தந்தையிடம், எல்லாப் பக்கமும் வழி மறைந்து விட வேறு வழியில்லாமல் வெடித்துச் சிதறும் அழுகையினூடே சொல்கிறாள் சித்ரா, "நா மட்டும் என்னா சொல்லிட முடியும்னு நெனைக்கிறீங்க...'

ராக்காலம்-
நள்ளிரவில் வயலில் புகுந்து மேய்ந்து விவசாயிகள் வயிற்றில் உலை வைக்கும் மாடுகளைப் பிடிக்கப் படும் பாடு இக்கதை. ஒரு சிலர் மாட்டைப் பிடித்து அடிமாட்டுக்கு விடுகிறார்கள். சிலர் வீட்டில் கட்டி வைத்து விற்கிறார்கள். தன் வயலைச் சேதப்படுத்திய மாட்டைப் பிடித்து அறுப்புக்கு அனுப்ப நினைக்கும் மற்றவர்களுடன் ஓடும் வெள்ளையன் மனம், மாட்டைப் பிடித்த பிறகு மாறுகிறது. "டேய் வாணான்டா, புடிச்சி கட்டி வளக்கறதுக்கு வேணுமின்னா வைச்சிக்கலாம். வாயில்லா சிவனுவோடா...நம்ப கையால அறுப்புக்கு வேணாண்டா...செனமாடுடா' என்று கெஞ்சுகிறான் வெள்ளையன். "இந்தாடா மயிரு, ஒங்குளுக்காவறது எனக்கு. எங்கியாவுது தின்னு அழிச்சிட்டுப்போவுது' என்று பிடித்தவன் கயிறை விடுகிறான்.
எந்த ஃப்ளூ கிராஸ் அமைப்பிலும் இல்லாத ஜீவகாருண்யர்கள் இந்த கிராமத்து எளிய மனிதர்கள்.

ஆணிகளின் கதை- அற்புதமான புனைவு. ஒருவகையில் கிராமத்து ஆண்களின் கதை என்று கூறலாம். கிராமங்களில் உள்ளதைப் போல கலாசார, பண்பாட்டு விதிகளும் இல்லை விதி மீறலும் இல்லை. ஏதோ நவீன உலகத்தில் நகர்புறங்களில் மட்டுமே பாலியல் உறவு முறைகள் மாறிக் கிடக்கின்றன என்று சொல்வோர் சற்றே கிராமங்களின் அந்தரங்கத்திலும் கவனம் செலுத்தலாம் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
"ஓரக்கட்டையில துணி சுத்தியிருந்தாக் கூட தூக்கிப் பார்த்துருவான்' என்று பேட்டையானைப் பற்றிப்பேசிக் கொள்வதுண்டு. அவன் வலையில் சிக்கிய பெண்கள் எக்கச்சக்கம். எப்பேர்ப்பட்ட கல் மனசுக்காரியாக இருந்தாலும் கரைத்துவிடுவான்' - இது ஒரு உதாரணம் மட்டும்.

கொடிபாதை- சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் இந்த ஊர் முன்னேறவில்லையே என்று வாழ்வில் ஒரு முறையேனும் நினைத்ததுண்டா? அதுவும் கிராமத்துக்கு வரும் ஒரே பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பிழிந்து மண் ரோட்டில் புழுதி பறக்க குலுங்கிச் சென்ற அனுபவம் உள்ளவர்கள் தினமும் சொல்லியிருப்பார்கள். அப்படி ஒரு பாதையில் செல்லும்போது பேருந்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி படும் அவஸ்தையைச் சொல்கிறது கொடிபாதை.

முந்திரிக் காடுகளைக் கொண்ட கிராமப் புறங்களில் மனித உறவுகளிடையே நிகழும் அற்புதத்தை அதன் அந்தரங்கத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் படைப்புகளாக இந்தக் கதைகள் வெள்ளெருக்கு எனும் தொகுப்பில் படிந்திருக்கின்றன.

கண்மணி குணசேகரன், விருத்தாசலத்தில்அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழிலாளியாகப் பணியாற்றுகிறார். இவரது பிற படைப்புகள் தலைமுறைக் கோபம் (கவிதை), உயிர்த் தண்ணீர் (சிறுகதை), அஞ்சலை (நாவல்), ஆதண்டார் கோயில் குதிரை (சிறுகதைகள்), காற்றின் பாடல் (கவிதை), நடுநாட்டுச் சொல்லகராதி என்ற அகராதியையும் தொகுத்துள்ளார்.

வெள்ளெருக்கு- கண்மணி குணசேகரன், சிறுகதைத் தொகுப்பு, வெளியீடு- தமிழினி, சென்னை. விலை ரூ.90.

Sunday, July 19, 2009

ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம்



பிரகாசமாக எரியும் விளக்கின் கீழே எப்போதும் இருக்கும் இருளைப் போல
மனதை மயக்கும் பிரமாண்டங்களின் உள்ளே விசித்திரங்களும் அபத்தங்களும் நிறைந்திருக்கின்றன. எளிய மனிதனுக்கு வெளிச்சமும் பகட்டும் மட்டுமே தெரிகின்றன. அல்லது அதை மீறிப் பார்க்க அவன் முயற்சிப்பதில்லை. விருப்பம் கொள்வதும் இல்லை.
பட்டுச் சேலையின் பளபளப்பின் ஊடே பட்டுப் புழுக்களின் ஓயாத மரண ஓலம்
ஒலித்துக் கொண்டிருப்பதை யாதொரு பெண்ணும் அறிந்திருப்பாளா எனத் தெரியவில்லை. தங்க, வைர மினுமினுப்பின் அடியில் சூழ்ந்திருக்கும் மையிருட்டில் இருந்து வறண்ட புன்னகையுடன் வாழ்வின் மிச்சத்தை எதிர்நோக்கும் முகங்களை யாரேனும் தெரிந்திருக்கிறார்களா?
ஒருவேளை அவர்களுக்கான வாழ்வாதாரமே, அந்த வெளிச்சத்தையும்
பிரமாண்டங்களையும் கேள்விகளற்று ஏற்றுக் கொள்ளும் எளிய மனிதர்கள் தானோ என்பதே தமிழ்மகன் எழுதிய ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம் நாவல் ஊடே பயணித்தபோது ஏற்பட்டது.

கதையும் சரி, புத்தகமும் சரி அதிக கனமில்லை. ஆனால் கதை மாந்தர்களின்
செயல்களும் வாழ்பனுபவமுமே படித்து முடிக்கையில் கனத்தை ஏற்படுத்துகிறது. எர்நெஸ்த் ஹெமிங்க்வே எழுதிய கிழவனும் கடலும், ஹெர்மன் ஹெஸ்ஸெவின் சித்தார்த்தன் போன்றவை பக்க அளவில் சிறியவையே. ஆனால் உள்ளடக்கத்தில்...?
நாவலை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து
எழுதியுள்ளார் ஆசிரியர் தமிழ்மகன். ஆனால் தலைகீழாக. காமம், சினிமா பொருளாதாரப் பிரச்னை, தத்துவம் என்று கதை நகர்கிறது. உச்சத்தில் இருந்து மெதுவாக சமநிலைக்கு வரும் ஓட்டப்பந்தைய வீரனின் மூச்சைப் போல.

இன்பத்துப் பால்

நடிகர்களின்வரலாற்றைஅறிந்திருக்கும் தமிழ் கூறும் நல்லுலகு சற்றேனும்
ஒரு நடிகையின் கதையை கிசுகிசுவாகவோ, வேறெப்படியோ தெரிந்துதான் வைத்திருக்கிறது. ஆனால் இழப்பின் வலி எத்தகையது என்பது அதை அறிந்தவர்களால் தான் உணர முடியும். எதையும் இழக்கத் தயாராக உள்ள பெண்ணுக்கு நடிகை ஆவது அத்தனை கடினம் இல்லை. ஆனால் தன்னை நிலை நிறுத்த அதற்கும் மேலே செல்ல வேண்டியுள்ளது என்பதை அறிகிறாள் நடிகை தீபிகா.
எல்லோருக்குள்ளும் ஒரு சோகக் கதை இருப்பதைப் போல தீபிகாவையும் பின்
தொடரும் கதையை தவிர்க்க முடியவில்லை. தனது தாயை ஏமாற்றிச் சென்ற தந்தை யார் என்பதை அவள் மூலம் தெரிந்து கொள்கிறாள். ஆனால் தாய் இறந்த பின் ஆதரவு இல்லாத அவள் ஒரு பத்திரிகை விளம்பரம் பார்த்து நடிகை ஆக வேண்டும் என உடுமலையில் இருந்து சென்னை வருகிறாள். அங்கே வெற்றியும் பெறுகிறாள்.
அவள் நடிகையானது இன்பத்துப்பால் பகுதியில் உற்சாகத்துடன் செல்கிறது. திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு பத்திரிகையாளராக ஆசிரியர்
தமிழ்மகனுக்கு ஏராளமான அனுபவங்கள் உள்ளது என்பதை ஒவ்வொரு வரியும் சொல்கிறது. வாசகனுக்குள் இருக்கும் ரசிகனை கட்டி இழுத்துச் சென்று படப்பிடிப்புத் தளத்தில் தள்ளிவிட்டு, பார் உன் தேவதைகளை, இதய தெய்வங்களை...அவர்தம் நிஜத்தை என்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்.

நடிகைக்கு முதல் பாடமேகூச்சம் தவிர்’- புதிய ஆத்திச் சூடி என்கிறார்.

திரையில்
தெரியும் பிரமாண்டம் நிறைந்த, அதன் பின்னே இருப்பவர்கள் நான்கு
கைகளும், ஒளிவட்டமும், சக்ராயுதமும் கொண்டோர் அல்ல; எளிய மனிதனின் இச்சை, பொறாமை, வஞ்சம், ஏமாற்றுதல் என்று அனைத்தும் சற்று அதிகமாகவே கொண்ட சராசரிக்கும் கீழான மனிதர்களே என எண்ண வைக்கும் ஹீரோக்கள் வினோத், பவன் சுந்தர், இயக்குநர் அர்விந்த, தயாரிப்பாளர் ஏழுமலை ஆகியோர் வெறும் கதை மாந்தர்கள் அல்ல, திரையுலகின் பிரதிநிதிகளே.
//இழக்கிற கற்பை கொஞ்சம் துணிச்சலாக இழக்க வேண்டும். அதே நேரத்தில் அதில் விபசார அர்த்தம் வந்துவிடக் கூடாது. காமம் கலந்த நாடகம். எதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தீபிகாவுக்குப் புரிந்தது// என்ற வரிகளே முதல் பகுதியை நம்மை வேகமாகக் கடக்க வைக்கிறது.
ஹீரோ, கிழ ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என்று தீபிகாவின் மீது ஏற்படும்
பொருந்தாக் காமம் அங்கே இயல்புக் காமம் ஆகியிருக்கிறது. தன் தாயை ஏமாற்றியவர் பிரபல இயக்குநர் பரணிகுமார் என்பது தெரிந்து அமைதியாக இருக்கிறாள் தீபிகா, தனது வளர்ச்சிக்காக. தீபிகா தன் மகள் என்பது அறிந்ததும் உணர்ச்சிவசம் அடையும் பரணிகுமாருக்கு ஏற்படும் சோக நிகழ்வு நம்மையும் தொற்றுகிறது.
அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சினிமா நிருபர் ஸ்ரீராம் மட்டுமே.

பொருட்பால்

திரையுலகின் போட்டி, பொறாமைக்கு இடையே கோடம்பாக்கத் தெருக்களில்
அலையும் உதவி இயக்குநர்களின் பிரதிநிதியாக மகேஷ். தனக்குள் பல ஹீரோக்களுக்குத் தேவையான கதைகளுடன் அலைகிறான் 14 வருடங்களாக. ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அதில் தீபிகா ஹீரோயின். அலைகள் ஓய்வதில்லை படம் முடியும் இடத்தில் அவனது படம் துவங்குகிறது. ஊரை விட்டு ஓடிப் போனவர்கள் எப்படி வாழ்க்கையில் போராடுகிறார்கள் என்ற கதையை படமாக்குகிறான். உண்மையில் தமிழ்மகனே கதையை கொண்டு செல்கிறார் சிரிப்பும் சிந்தனையுமாக. படம் ஹிட் ஆகிறது. (ஆசிரியர் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். இதே கதை எங்காவது, எப்பவாவது திரைப்படம் ஆகலாம்.)
தீபிகாவுக்குள் ஸ்ரீராம் மீதான காதல் இழையோடுகிறது. ஆனால் முடிவு
எடுக்காமல் பழைமைக்கும், புதுமைக்கும் இடையே ஊசலாடும் ஸ்ரீராம், தற்போதைய முன்னாள் நடிகைகளின் கணவர்களின் மனசாட்சிதான்.
ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள், நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள், ஃபைனான்ஸியர்கள், பிஆர்ஓக்கள், மேக்கப் மேன்கள், சினிமா நிருபர்கள் என்று
சாதாரண ரசிகன் பயணிக்காத, பயணிக்க விரும்பாத சினிமாவின் மற்றொரு சித்திரம் இப்பகுதியில் அசைகிறது.
அப்போதும் மிச்சமிருக்கும் தீபிகாவின் காதலை ஏற்க ஸ்ரீராம் நினைக்கையில், அவள் மகேஷின் மனைவியாகிறாள்.

அறத்துப்பால்

தீபிகாவின் இயக்குநர்-கணவன் எடுத்த படம் பிளாப் ஆகிறது. மீண்டும் தன்னை
நிரூபிக்கும் வெறி. ஹீரோ அவனே. ஹீரோயின் தீபிகா. படம் பாதியில் நிற்கிறது. நமக்கு நிஜ முகங்கள் நிழலாடுகின்றன. அவளை தயாரிப்பாளரிடம் படுக்க சொல்கிறான். அவள் மறுக்கிறாள். இப்படி, அரிதாரங்களின் பின்னிருக்கும் அபத்தம் எளிய ரசிக மனதை வெறுமை மனநிலைக்கு கொண்டு செல்கிறது.
ஒரு அநாதையான, அதுவும் நடிகையான அவளுக்கு பணம், புகழ்
தேவைப்படவில்லை. உண்மையான அன்புக்கே ஏங்குகிறாள். குத்தாட்டம் போடும் ஒவ்வொரு நடிகைக்குள்ளும் இப்படியான ஓராயிரம் நிராசைகளின் சத்தம் ஓலமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
கிழ ஹீரோ பவன்சுந்தர் கட்சி தொடங்குகிறார். தன் கணவனின் பணத்
தேவையை சமாளிக்க அவனிடம் சரணடைகிறாள் தீபிகா. ஆனால் அவளே எதிர்பார்க்காத ஒன்று, கட்சியில் கிடைக்கும் அங்கீகாரம். பிறகு என்ன ஆகிறாள் என்பதை 60களுக்குப் பின் வந்த சினிமா-நிஜ உலகின் நட்சத்திரங்களின் வாழ்வோடு நம் மனது தொடர்புபடுத்தி பார்ப்பதை அவ்வளவு எளிதில் நிறுத்திவிட முடியாது.
தலைப்புக்கு ஏற்ப அறம் கூறும் பகுதியாக இப்பகுதியை அமைத்துள்ளார்
ஆசிரியர்.
//நிம்மதியை விற்று பெருமை சேகரிக்கிறார்கள், சுயமரியாதையை விற்று கார் வாங்குகிறார்கள், அமைதியை விற்று வீடு வாங்குகிறார்கள், கற்பை விற்று புகழைத் தேடுகிறார்கள், பண்பை விற்று பணம் சேர்க்கிறார்கள். எதற்கு எது ஈடு என்று புரியவில்லை. இதைவிட இது சிறந்தது என்பது மாறிவிட்டது...//
நாவலின் மையப் புள்ளி இதுதான்.

கட்சியில் ஒரு கோடி ரூபாய் கொடுத்து சேர்த்துக் கொண்ட துணைப் பொதுச்
செயலாளர் தீபிகாவின் பேச்சாற்றல் கண்டு பேசத் தெரியாத கிழ ஹீரோ-கம்-கட்சித் தலைவர் பவன்சுந்தருக்கு ஏற்படும் மனப்புழுக்கம், வெறும் பிம்பத்தை வைத்து கட்சி ஆரம்பித்தவன் கதை இதுதான் என்பதை அவன் உணரும் போது, வாசகனுக்குள்ளும் வந்து போகிறார்கள் பல புதுக்கட்சித் தலைவர்கள்.

//உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறுஎன்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னது மக்களுக்கு மிகச் சரியாகப் புரியும்படிதான் இருந்தது தமிழ் சினிமா உலகம். ஜெயகாந்தன் இதையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம். “தமிழ் சினிமா உலகம் முற்றிலும் வேறு’// உண்மைதான்!
இறுதியாக முன்னாள் நடிகையாக அரசியல் கட்சியில் சேர்ந்த தீபிகா
என்னவாகிறாள் என்பதை வெகு நேர்த்தியாக முடித்திருக்கிறார் தமிழ்மகன். ஆனால் அங்கிருந்து திரையுலகம், நிஜ உலகம் இரண்டிலும் பயணிக்கத் துவங்குகிறது வாசகனின் மனம்.

செல்லுலாய்டு தெய்வங்களைப் போற்றும் ரசிகர்களின் மனம் எளிமையானவையே என்பதை உணர்ந்தால், கனவுத் தொழிற்சாலை, கரைந்த நிழல்கள், சினிமாவுக்குப் போன சித்தாளு, கன்னியாகுமரி வரிசையில், இக்கதையின் உள்ளே உள்ள தீவிரத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

ஏவி.எம்.ஸ்டுடியோ-ஏழாவது தளம் ஆசிரியர்- தமிழ்மகன், பக்கம் 192, முற்றம் வெளியீடு, சென்னை. விலை- ரூ.60