Pages

Tuesday, September 8, 2009

வெள்ளெருக்கு- முந்திரிக்காட்டின் அந்தரங்கம்

மனிதர்களின் மனம் எப்போதும் இழந்ததை நினைத்து ஆயாசப்படும். மண்ணையும் உறவுகளையும் இழந்து தவித்து துன்பப்படும் மனதைக் கொண்டிராதவர்கள் உலகில் எத்தனை பேர்? துன்பங்களின் சுவடுகள் எப்போதும் கடந்து வந்த பாதையை மறக்கச் செய்வதில்லை. ஏதோவொன்றை இலக்கு வைத்து எழுதப்படும் எழுத்தை இலக்கியம் என்று கொண்டால் அவ்வாறு எழுதப்படும் ஒவ்வொரு கதையும் இலக்கியத்தின் எல்லைக்குள் நின்று நிலைப்பவை எனலாம். துன்பியல் நாடகங்களும், கதைகளும், நாவல்களும் என்றும் நிலைத்து நம் மனதின் ஆறாத பக்கங்களில் உள்ள தழும்புகளை நிரண்டிப் பார்க்கின்றன. அது சில வேளைகளில் மீண்டும் திறந்து பார்க்க நினைக்காத நம் மனக் கதவுகளை சற்றே திறக்க வைத்து உள்ளிருக்கும் அன்பு, கோபம், இரக்கம் எனக் கசிய வைக்கிறது.

கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு' சிறுகதைத் தொகுப்பை படித்தபோது இந்த உணர்வே ஏற்பட்டது. தமிழினி வெளியீடான இத் தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. விருத்தாசலம், விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளில் வாழும் கிராம மக்களின் கதையை வட்டார மொழிநடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

சீவனம்- இந்தத் தொகுப்பிலேயே மிகப்பிடித்த அழ வைத்த கதை இது. நகர நாகரிகமும், உலகப் பொருளாதாரத் தாக்கமும் கிராமத்தில் கூலி வேலை செய்பவனைக் கூட விட்டுவைக்காமல் அடித்து துவைத்து விட்டது என்பதைக் கூறும் கதை. விளைந்ததைக் கொண்டு செல்ல மாடு வேண்டும், மாட்டுக்கு வண்டி வேண்டும், வண்டியின் சக்கரத்துக்கு பட்டா போடுவார்கள். அதை பட்டறையில் வைத்து காய வைத்து அடித்து சீர் செய்து சக்கரத்தில் பொருத்துவார்கள். உலைக் களத்துக்கு கரி வேண்டும். கரி வாங்க காசு வேண்டுமே? எங்கே போவது.

"டயர் வண்டிகள் வந்த பிறகு, கொல்ல ஆசாரியை யாரும் ஏறெடுத்துப் பார்கவில்லை. வேலை முடங்கியது. வரும்படி குறைந்தது. வயிற்றில் சுருக்கம் விழுந்தது. உலைக்களம் கேட்பாரற்றுப்போய்விட்டது. எப்போதாவது சில்லறை வேலைக்கு, கூலிக்கு மல்லுக்கட்டி வாதாட வேண்டியிருக்கிறது'.

அப்போதுதான் வாராமல் வருகிறது சில்லறை வேலை. எங்கு கேட்டும் கரி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், கரியில்லை என்று திருப்பி அனுப்ப மனமில்லாமல் சுடுகாடு நோக்கி நடக்கிறார் ஆசாரி. அங்கே அவர் செய்யப் போகும் செயல் ஒரு கணம் வாழ்வின் மீளமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தும். அன்றைக்கு இறந்துபோன ஒருவனை எரித்த இடத்தை சுடுகாட்டில் தேடுகிறார். ஒரு விநாடி நிதானித்துவிட்டு கொண்டுவந்த சாக்கில், கீழே கிடக்கும் எரிந்து மீதியான கரித்துண்டுகளை எடுத்துப் போடுகிறார். அதில் எலும்பும் சேர்ந்தே வருகிறது. "மொத வேலயா ஊட்லபோய் கொட்டி, கெடக்கற எலும்புத் துண்டுவுள பொறுக்கி எட்டப் போடணும்'. என்று வேலை செய்யும் போது, "என்னா கரியில வெள்ளையா எலும்பு மாதிரி...' என்கிறான் எதிரில் இருப்பவன். "பைத்தியமா ஒனக்கு. பீங்கான் ஓடு' என்று வேகமாய் தூக்கி வேலிக்கு அந்தாண்ட எறிந்தான்.

வண்ணம்- ஆர்ட் கேலரிகளிலும், வழுவழு காகிதங்களில் அச்சான நவீன ஓவியங்களையும் பார்த்து பிரமிக்கும் கலா ரசிகர்களை சற்றே கிராமத்து ஓவியனின் பக்கம் திருப்புகிறது இக்கதை. கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்த வைக்கப்படும் சிலைகளுக்கு வண்ணம் அடிக்கும் தொழில் செய்கிறார் நடராஜ ஸ்தபதி. அவரிடம் தொழில் கற்றுக் கொள்ள விரும்பும் சிலம்பரசனுக்குக் கிடைப்பதோ கருப்பு வண்ணம் அடிக்கும் வேலை மட்டுமே.
"கருப்பு, கருப்பு எல்லாம் இருட்டாகவே போய்க் கொண்டிருந்தது வண்ணங்களைப் பற்றிய அவன் கனவு'. பயிற்சி பெறும் வரை கருப்பு பெயிண்ட் மட்டுமே அடிக்கக் கொடுக்கிறார் ஸ்தபதி. தனக்கு என்று உள்ள கனவை வெற்றி கொள்ள ஐயனார், வீரனார், குதிரை சிலைக்கு வண்ணக் கலவை அடிக்க ஒரு வாய்ப்பாவது கொடுக்கக் கூடாதா என்று வாய்ப்பை எதிர்நோக்கும் கிராமத்து ஓவியனின் மனம் சிலிர்க்க வைக்கிறது. வேறு தொழில் என்று பட்டறைக்குச் சென்றாலும் கருப்பு மை ஒட்டுகிறது உடலெங்கும். வண்ணமயமான வாழ்வை எதிர்பார்ப்பவனுக்கு வழிய வருவது கருப்பு மட்டுமே. செலம்புவின் மனம் கடைசியில், "இந்த கருப்புப் பெயிண்ட் இனி கையால நா தொடமாட்டன். எம்மாம் நாளைக்கி கருப்பு கருப்புன்னு அடிச்சிக்கிட்டுக் கெடக்கறது?' என்று ஸ்தபதியிடம் கோபப்பட வைக்கிறது. ஸ்தபதி சிரித்துக் கொண்டே, "சரி சரி, செவுப்பு பெயிண்ட எடுத்துக்கிட்டுப் போயி, ரெண்டு குதிரைக்கும் வாணியில அடி' எனும்போது பெரிய ஓவியனைப் போல் அவனுக்குள் ஒரு நிழல் விரிகிறது. தன் லட்சியத்தை அடையக் கிடைத்த துருப்புச் சீட்டு போல நினைத்து சிவப்பு பெயிண்டை மென்மையாக பூசியபோது கூச்சத்தில் நெளிகிறது குதிரை.

வெள்ளெருக்கு- அன்றிலிருந்து இன்று வரை கிராமப்புற பள்ளிக் கூடங்களில் ஆசிரியருக்கு வேலை செய்வதற்கென்றே சில மாணவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். சில நேரங்களில் பாடத் தொல்லையைத் தவிர்க்க அவர் எப்போது டீ வாங்கி வரச் சொல்லுவார், வீட்டுக்குப் போய் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுவார் என மாணவர்கள் காத்திருப்பார்கள் என்பது கிராமப் பள்ளியில் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆசிரியரின் ஆண் குழந்தைக்கு அரஞாண் கயிறு திரிக்க வெள்ளெருக்குச் செடியைத் தேடி அலையும் சிறுவர்கள் கதை. படிக்கும் போது நம் பால்யத்தின் கதவுகள் சற்றே திறந்து கொண்டு மனதினுள் காற்று வீசுவதைத் தடுக்க முடியவில்லை.

வனாந்திரம்- தாய், மகன் உறவு சொல்கிறது. கணவனை இழந்தவள் முந்திரி பயிர்களைப் பொறுக்கி விற்று பிழைப்பு நடத்துகிறாள். சிறுவயது மகனை வைத்துக் கொண்டு அவன் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் திணறுகிறாள். முந்திரிப் பயிறு குழம்பு கேட்டு நச்சரிக்கும் மகனுக்கு ஆசை தீர செய்து கொடுக்கிறாள். ஆனால் அவள் சாப்பிட மறுக்கிறாள்.
"என்னாம்மா ஒனக்காகத்தான் இம்மானையும் செய்ய சொன்னன். என்ன சாக்குட்டாவது, நீ நாலு வாயில போடுவன்னுதான இம்மாம் அடி அடிச்சிகிட்டன்...' அவனுக்கு குரல் கம்மியது. "இல்லப்பா, நாம்ப இருக்கற நெலையில, நாக்குக்கு ருசியா தேடனா அது ஒத்து வராதுப்பா. ஏதோ பச்சத் தண்ணியா இருந்தாலும், வவுறு நொம்புதான்னுதாம் பாக்கணும்'.
அவளுக்கு குரல் உடைந்து போயிருந்தது.

வலை- அக்கா இறந்துவிட்டால் தங்கைதான் இரண்டாந்தாரம் என்ற கிராமத்து பழக்கத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்ணின் கதை. எல்லோரும் முடிவெடுத்துவிட்டு அவளிடமும் ஒரு வார்த்தைக் கேட்க நினைக்கிறார்கள். "அப்புறம் நீ என்னம்மா சொல்ற' எனக் கேட்கும் தந்தையிடம், எல்லாப் பக்கமும் வழி மறைந்து விட வேறு வழியில்லாமல் வெடித்துச் சிதறும் அழுகையினூடே சொல்கிறாள் சித்ரா, "நா மட்டும் என்னா சொல்லிட முடியும்னு நெனைக்கிறீங்க...'

ராக்காலம்-
நள்ளிரவில் வயலில் புகுந்து மேய்ந்து விவசாயிகள் வயிற்றில் உலை வைக்கும் மாடுகளைப் பிடிக்கப் படும் பாடு இக்கதை. ஒரு சிலர் மாட்டைப் பிடித்து அடிமாட்டுக்கு விடுகிறார்கள். சிலர் வீட்டில் கட்டி வைத்து விற்கிறார்கள். தன் வயலைச் சேதப்படுத்திய மாட்டைப் பிடித்து அறுப்புக்கு அனுப்ப நினைக்கும் மற்றவர்களுடன் ஓடும் வெள்ளையன் மனம், மாட்டைப் பிடித்த பிறகு மாறுகிறது. "டேய் வாணான்டா, புடிச்சி கட்டி வளக்கறதுக்கு வேணுமின்னா வைச்சிக்கலாம். வாயில்லா சிவனுவோடா...நம்ப கையால அறுப்புக்கு வேணாண்டா...செனமாடுடா' என்று கெஞ்சுகிறான் வெள்ளையன். "இந்தாடா மயிரு, ஒங்குளுக்காவறது எனக்கு. எங்கியாவுது தின்னு அழிச்சிட்டுப்போவுது' என்று பிடித்தவன் கயிறை விடுகிறான்.
எந்த ஃப்ளூ கிராஸ் அமைப்பிலும் இல்லாத ஜீவகாருண்யர்கள் இந்த கிராமத்து எளிய மனிதர்கள்.

ஆணிகளின் கதை- அற்புதமான புனைவு. ஒருவகையில் கிராமத்து ஆண்களின் கதை என்று கூறலாம். கிராமங்களில் உள்ளதைப் போல கலாசார, பண்பாட்டு விதிகளும் இல்லை விதி மீறலும் இல்லை. ஏதோ நவீன உலகத்தில் நகர்புறங்களில் மட்டுமே பாலியல் உறவு முறைகள் மாறிக் கிடக்கின்றன என்று சொல்வோர் சற்றே கிராமங்களின் அந்தரங்கத்திலும் கவனம் செலுத்தலாம் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
"ஓரக்கட்டையில துணி சுத்தியிருந்தாக் கூட தூக்கிப் பார்த்துருவான்' என்று பேட்டையானைப் பற்றிப்பேசிக் கொள்வதுண்டு. அவன் வலையில் சிக்கிய பெண்கள் எக்கச்சக்கம். எப்பேர்ப்பட்ட கல் மனசுக்காரியாக இருந்தாலும் கரைத்துவிடுவான்' - இது ஒரு உதாரணம் மட்டும்.

கொடிபாதை- சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் இந்த ஊர் முன்னேறவில்லையே என்று வாழ்வில் ஒரு முறையேனும் நினைத்ததுண்டா? அதுவும் கிராமத்துக்கு வரும் ஒரே பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பிழிந்து மண் ரோட்டில் புழுதி பறக்க குலுங்கிச் சென்ற அனுபவம் உள்ளவர்கள் தினமும் சொல்லியிருப்பார்கள். அப்படி ஒரு பாதையில் செல்லும்போது பேருந்தில் ஒரு நிறைமாத கர்ப்பிணி படும் அவஸ்தையைச் சொல்கிறது கொடிபாதை.

முந்திரிக் காடுகளைக் கொண்ட கிராமப் புறங்களில் மனித உறவுகளிடையே நிகழும் அற்புதத்தை அதன் அந்தரங்கத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் படைப்புகளாக இந்தக் கதைகள் வெள்ளெருக்கு எனும் தொகுப்பில் படிந்திருக்கின்றன.

கண்மணி குணசேகரன், விருத்தாசலத்தில்அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழிலாளியாகப் பணியாற்றுகிறார். இவரது பிற படைப்புகள் தலைமுறைக் கோபம் (கவிதை), உயிர்த் தண்ணீர் (சிறுகதை), அஞ்சலை (நாவல்), ஆதண்டார் கோயில் குதிரை (சிறுகதைகள்), காற்றின் பாடல் (கவிதை), நடுநாட்டுச் சொல்லகராதி என்ற அகராதியையும் தொகுத்துள்ளார்.

வெள்ளெருக்கு- கண்மணி குணசேகரன், சிறுகதைத் தொகுப்பு, வெளியீடு- தமிழினி, சென்னை. விலை ரூ.90.