Pages

Saturday, December 31, 2011

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'- 2

ஆன்டன் செகாவ் பந்தயம் சிறுகதை தொடர்ச்சி...



தோட்டத்தில் கும்மிருட்டும் குளிரும் ஒரு சேர இருந்தது. தோட்டத்தை நோக்கி ஊளையுடன்  வந்த காற்று மரங்களை ஓய்வு எடுக்க விடாமல் அசைத்துக் கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தபோதும் தோட்டத்தில் இருந்த வெள்ளை நிற சிலையோ, மரங்களோ, விடுதியோ, சிறை வாசியின் இருப்பிடமோ கண்களுக்குப் புலப்படவில்லை வங்கி அதிபருக்கு. அந்தக்கட்டடத்தின் அருகே சென்று இருமுறை குரல் எழுப்பியும் காவலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. அடிக்கும் குளிரில் இந்தக் கட்டடத்தின் சமையலறையிலோ அல்லது  ஏதோவொரு மூலையிலோ காவலாளி உறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டார்.

'எனது திட்டத்தை  செயல்படுத்தினால் முதலில் காவலாளி மீதுதான் சந்தேகம் எழும்'  என்று நினைத்துக் கொண்டார் அந்த வயோதிகர்.

அந்த இருளில் தட்டுத் தடுமாறி தனிமை சிறை உள்ள விடுதியின் மாடிப் படிகளை கண்டு கொண்டார். உள்ளே சென்று ஒரு தீக்குச்சியை உரசினார். அங்கே ஆளரவமற்று இருந்தது. அந்த இளைஞர் உள்ள அறை கதவு பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீல் எந்த சேதமும் அடையாமல் அப்படியே இருந்தது.

தீக்குச்சி அணைந்ததும் நடுக்கத்துடன் அந்த அறையின் சாளரத்தின் வழியே அவர் எட்டிப் பார்த்தார். உள்ளே ஒரு சிறிய மெழுகுவர்த்தி மெலிதாக எரிந்து கொண்டிருந்தது. சாளரத்தை கை விரலால் தட்டினார். இளைஞரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அசைவுமில்லை. கதவின் பூட்டிலிருந்த சீலை கவனமாக உடைத்து அதில் சாவியை நுழைத்தார். துரு ஏறியிருந்த பூட்டு கிறீச்சிட்டபடி திறந்தது. கதவை திறந்தபோது அந்த விடுதியில் சத்தம் எழுப்பியது. கதவை திறந்தால்  பெரும் சத்தம் அந்த இளைஞரிடமிருந்து எழும்பும் என்று நினைத்த வங்கியருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போதும் போல் அந்த அறை மௌனமாக இருந்தது. கதவு திறந்து மூன்று நிமிடங்கள் ஆகியும் எந்த சத்தமும் இல்லாததால் தைரியத்தை வரவழைத்தபடி உள்ளே சென்றார்.
அங்கிருந்த  மேசையின் மீது தலை வைத்து உட்கார்ந்திருந்த அந்த இளைஞர் உடல் எலும்பை சுற்றி வைத்த போர்வை போலிருந்தது. நீண்ட முடியுடன் தாடியுடனும்  வெளிறிய முகத்துடனும் காணப்பட்டார். கன்னங்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக, நைந்து கிடந்த அந்த இளைஞரை பார்க்க பயங்கரமாக இருந்தது. வெளுத்த தலை முடியையும், குலைந்த உடலையும் பார்ப்பவர்கள் அந்த இளைஞருக்கு நாற்பது வயதுதான் ஆகிறது என்பதை நம்ப மாட்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அந்த இளைஞர் தலை கவிழ்ந்து படுத்திருந்த மேசையில் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடந்தது. 

'பாவப்பட்ட ஜென்மம்' என்று நினைத்தார் வங்கியர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் இந்த நைந்து போன இளைஞர் நாளை கிடைக்கும் மில்லியன் ரூபிள்கள் பற்றிய கனவில் இருப்பார். பாதி இறந்த இந்த பிணத்தை தூக்கி கட்டிலில் கிடத்தி ஒரு தலையணையால் அமுக்கி கொன்றால் யாருக்குத்  தெரியப் போகிறது. சிறந்த மருத்துவ நிபுணரால் கூட இந்தக் கொலையை கண்டறிய முடியாது. அதற்கு முன் அந்த கடிதத்தில் என்னதான் அவன் எழுதியிருக்கிறான் என்று பார்ப்போமே என்று எண்ணி அதை எடுத்தார் வயோதிகர்.
கடிதத்தில் அந்த இளைஞர் எழுதியிருந்ததை வாசித்தார் வங்கியாளர்.

'நாளை 12 மணிக்கு நான் எனது சுதந்திரத்தை மீட்டு விடுவேன். அதோடு பிற மனிதர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பையும் பெற்று விடுவேன். ஆனால் இந்த அறையை விட்டுச் சென்று சூரிய ஒளியை பார்க்கும் முன் உங்களுக்கு சில வார்த்தைகள் கூற நினைக்கிறேன். நான் இந்த சுதந்திரத்தையும், வாழ்வையும், வளத்தையும் மற்றும் நீங்கள் அளித்த புத்தகங்கள் கூறும் அனைத்து உலகியல் நலங்களையும் தூக்கி எறிய முடிவு செய்து விட்டேன். என்னை காத்து ரட்சிக்கும் கடவுளிடம் கூறுவது போல்  தெளிவான மனசாட்சியுடன் இதை நான் சொல்கிறேன்.

'கடந்த 15 ஆண்டுகளாக உலக வாழ்வை நான் வெகு ஆர்வத்துடன் படித்தேன். மனிதர்களையோ இந்த பூமியையோ நான் பார்த்திருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், நீங்கள் கொடுத்த புத்தகங்களின் மூலம் நான் வாழ்வை அனுபவித்தேன். மிகச் சிறந்த நறுமணமிக்க ஒயினை சுவைத்தேன், பாட்டுப் பாடினேன், காட்டுப் பன்றியையும், கலை மான்களையும்  வேட்டையாடினேன்,  பெண்களை காதலித்தேன். நுண்மையான அழகுடைய மேகங்களையும் உங்கள் கவிஞர்கள் புனைந்த அற்புதமான கவிதைகளையும் ரசித்தேன். இரவு நேரங்களில் தேவதைகள் காதுகளில் வந்து தமது அற்புதமான கதைகளை எனக்குக் கூறினர்.'

'உங்கள் நூல்களில் இருந்த எல்புரூஸ் மற்றும் மான்ட் பிளாங்க் மலை உச்சிகளின் மீதேறி சூரியோதையத்தையும் கடலில் இறங்கும் சூரியனின் அஸ்தமனத்தையும் அந்தி வானச் சிவப்பையும் ரசித்திருக்கிறேன். என் தலைக்கு மேலே மின்னிச் செல்லும் மின்னலையும் இடிஇடிக்கும் மேகங்களையும் கண்டேன். வனங்களும், வயல்களும், ஆறு ஏரிகளும் கடல்களும், நகரங்களும் என் மனதை நிறைத்தன. உங்கள் நூல்களின் வழியே அற்புதங்களை நிகழ்த்தினேன். புதிய மதங்களை பரப்பினேன். பேரரசுகளை வென்றெடுத்தேன்.'

'உங்கள் நூல்கள் எனக்கு ஞானத்தைக் கொடுத்தன.  மனிதனின் ஓய்வில்லாத சிந்தனையால் விளைந்த  அறிவு அனைத்தும் எனது மூளையில் ஒரு சிறிய திசை காட்டும் கருவி போல் சுருக்கி பதிய வைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லோரையும் விட நான் ஞானமுள்ளவன் என்பதை நானிறிவேன்.'

'உங்கள் நூல்களையும், ஞானத்தையும்,  உலகத்தின் ஆசியையும் நான் வெறுக்கிறேன். இவை எல்லாம் பயனற்றவை. மாயை. கானல் நீர் போன்றவை. நீங்கள்  பெருமையடையலாம். அறிவு உடையவர்களாக இருக்கலாம். நன்றாக வாழலாம். ஆனால் மரணம் உங்கள் அனைவரையும் இந்தப் பூமிப் பந்தின் மேலிருந்து துடைத்துச்  சென்றுவிடும். உங்கள் வழித் தோன்றல்கள், வரலாறுகள், மாபெரும் புத்திக் கூர்மை அனைத்தும் இந்த பூமியோடு அழிந்துவிடும்.'

'உங்கள் பகுத்தறிவை இழந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உண்மைக்குப் பதில் பொய்யையும், அழகுக்குப் பதில் அறுவெறுப்பையும் எடுத்துக் கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சு மரங்களில் ஏதேனும் திடீர் மாற்றத்தால் பல்லிகளும், தவளைகளும் காய்த்தால் அதை நீங்கள் மலைப்புடன் பார்ப்பீர்கள். ரோஜாவின் நறுமணத்துக்குப் பதில் குதிரையின் வியர்வை நாற்றத்தை ரசிப்பீர்கள். ஆனால் சொர்க்கத்திற்கு பதில் நரகத்தை விரும்பும் உங்களை பார்த்து நான் மலைத்துப் போகிறேன். உங்களை புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.'

'இதை உங்களுக்கு நான் நிரூபிக்கும் விதமாக ஒரு காலத்தில் நான் சொர்க்கமாய் கனவு கண்ட மில்லியன் ரூபிள்களை துச்சமாக மதித்து அதை துறக்கிறேன்.  அந்தப் பணத்தை வெறுக்கிறேன். அதை இழக்கும் விதமாக பந்தயம் முடியும் ஐந்து மணி  நேரத்துக்கு முன்பாகவே நான்  வெளியேறுகிறேன்.....ஆம்....ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு செல்கிறேன்....'

இதை படித்த வங்கி அதிபர் அந்தக் கடிதத்தை வைத்துவிட்டு அந்த இளைஞரின் தலையை தடவி முத்தமிட்டு சத்தமில்லாமல் விசும்பியபடியே வெளியேறினார். வாழ்வின் எத் தருணத்திலும் பங்குச் சந்தையில் பெரும் இழப்பை சந்தித்த போது கூட அவர் மனம் இத்தகு அவமானத்தை  அடைந்ததில்லை. வீட்டுக்கு வந்ததும் படுக்கையில் விழுந்தார். அவர் மனமும் கண்களும் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தன.

மறுநாள் காலை அந்த விடுதியின் காவலாளி ஓடோடி வந்து அவரிடம், அந்த இளைஞர் சன்னல் வழியே எட்டிக் குதித்து தோட்டத்திற்கு வந்து, அங்கிருந்த கதவு வழியே வெளியே ஓடிவிட்டார் என்று கூறினார். உடனே அங்கு கிளம்பிச் சென்று அந்த இளைஞர் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டார்.

மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த அவர், அங்கிருந்த மேசையின் மேல் கிடந்த, மில்லியன் ரூபிள்களை இழப்பதாக அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து வந்து, தனது வீட்டின்  பெட்டியில் வைத்துப் பூட்டினார்.

The Bet என்ற இக் கதையின் ஆங்கில வடிவம் இங்கே.

Friday, December 30, 2011

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'-1

மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை  தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்.

எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப்  போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது.



                                                                  பந்தயம்
 
பனி பொழியும் ஓர் இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த அறிவிற்  சிறந்த இளைஞர்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் நடந்தது. பல விஷயங்களைப் பேசிய அவர்கள் ஒரு கட்டத்தில் மரண தண்டனை குறித்தும் தங்களது உரையாடலில் விவாதித்தனர்.

விருந்துக்கு வந்திருந்த பெரும்பாலானோரில் பத்திரிகையாளர்களும், மெத்தப் படித்த கனவான்களும் மரண தண்டனை அளிப்பதை நிராகரித்தனர். இம்மாதிரியான தண்டனை நீதி நெறியற்றது, காலத்திற்கு ஒவ்வாதது, பழம் பஞ்சாங்கம், ஒரு கிறிஸ்தவ நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்று வாதிட்டார்கள். இன்னும் சிலரோ, எங்கெல்லாம் மரண தண்டனை விதிக்க இடமிருக்கிறதோ அங்கெல்லாம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசப்பட்டார்கள்.

 'உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றார் அந்த வங்கியாளர்.  'ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ இதுவரை நான் அடைந்ததில்லை. ஆனால் ஒரு நீதிபதியின் இடத்தில் இருந்து பார்த்தால் ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே மிகவும் அறம் சார்ந்தது, நீதி நெறிமிக்கது. மரண தண்டனை ஒருவனை உடனடியாகக் கொல்கிறது. ஆனால் ஆயுள் தண்டனையோ கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது. ஒரு மனுஷனை சில நிமிஷத்தில் கொல்வது நல்லதா அல்லது சிறிது சிறிதாக வாழ்க்கை முழுவதும் சாகடிக்கிறது நல்லதா. இதில் எது மனித நேயம் மிக்கது?'
'இரண்டுமே நீதியற்றது, மனித நேயமில்லாதது' என்றார் ஒரு விருந்தினர்.  இரண்டு தண்டனைகளின் நோக்கமும் வாழ்வை ஒருவனிடம் இருந்து எடுத்துக் கொள்வதுதான். அரசாங்கம் என்பது கடவுள் அல்ல. அரசாங்கத்தால் ஓர் உயிரைக் கொடுக்க முடியுமா. நிச்சயமா முடியாது. அதனால அதுக்கு ஓர் உயிரை எடுக்கிற உரிமையும் இல்லை' என்றார்.
வந்திருந்த விருந்தினர்களில் ஓர் இளம் வழக்கறிஞரைப் பார்த்து அவரது கருத்து என்ன என்று கேட்டோம்.

'இரண்டுமே மனித நேயமற்றது. ஆனால் ஆயுளா அல்லது மரணமா என்று கேட்டால் நான் ஆயுள் தண்டனையையே தேர்வு செய்வேன். ஏன்னா, சாகறத விட எப்படியாவது உயிரோட இருக்கிறது நல்லது தானே' என்றார்.

விவாதம் உச்சத்தை அடைந்தது. அப்போது வங்கி அதிபர் மிக இள வயதினராக இருந்ததால் பெரும் மன எழுச்சி கொண்டு  உணர்ச்சி வேகத்தில் இருந்தார்.

'இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்களால் தனிமைச் சிறையில் ஒரு 5 வருஷங்கள் கூட இருக்க முடியாதுங்கிறேன். பாக்கலாமா? என்ன பந்தயம்? 2 மில்லியன் ரூபிள் பந்தயம். ஓகேவா?' உணர்ச்சி வேகத்தில் டேபிளை ஓங்கித் தட்டினார் வங்கி அதிபர்.

'நீங்க நிஜமாத்தான் சொல்றீங்கன்னா, உங்க பந்தயத்துக்கு நான் தயார். ஆனால் 5 வருஷமில்ல 15 வருஷத்துக்கு நான் ரெடி' என்றார் இளம் வழக்கறிஞர்.

'15 வருஷமா...அப்படின்னா நானும் ரெடி. ஜென்டில்மென் இதோ 2 மில்லியன் கொடுக்க நான் ரெடி' இப்போதே வெற்றி பெற்றது போல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் அதிபர்.

'ஒப்புக்கிறேன். நீங்க உங்க மில்லியனை பந்தயம் கட்டுங்க. நான் என் சுதந்திரத்தை பந்தயமா கட்டுறேன்' வக்கீலும் ஆவேசமானார்.

இந்த முட்டாள்தனமான பந்தயம் துவங்கியது. மில்லியன் ரூபிள்களை எடுத்து வைத்த வங்கி அதிபர் இரவு விருந்தின் போது அந்த இளம் வழக்கறிஞரை சீண்டினார்.

'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நல்லா யோசிச்சு முடிவு செய்யுங்க தம்பி. எனக்கு 2 மில்லியன் ரூபிள் சும்மா... ஒன்னுமே இல்லை. ஆனா உங்களுக்கு வாழ்க்கையோட 3, 4 சிறந்த வருஷங்கள் வீணாப் போயிரும். நான் மூனு நாலுன்னு ஏன் சொல்றேன்னா அதுக்கு மேல உங்களால தனிமை சிறையில இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனால அப்படி சொல்றேன். அதே மாதிரி கட்டாயமா சிறைக்குள்ள இருக்கிறது வேற. நீங்களே விரும்பி தனிமைச் சிறைக்குள்ள அடைஞ்சுக்கிறது வேறங்கிறது புரிஞ்சுக்குங்க தம்பி.  அது ரொம்ப கஷ்டமானது. எந்த நிமிஷத்திலாவது  நீங்க சிறையிலிருந்து வெளிய போயிருவோம்டா சாமீ என்று நினைத்தாலும் மொத்த சிறைக் காலமும் உங்களுக்கு ரொம்ப வேதனை தருவதாக மாறிடும். ஞாபகம் வச்சுக்குங்க. பாவம் நீங்க' என்றார் அதிபர்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த வங்கி அதிபர் நினைத்துக் கொண்டார். 'இந்தப் பந்தயத்தின் நோக்கம் என்ன?  அந்த மனுஷன் 15 வருஷத்தை இழப்பதும், நான் 2 மில்லியனைத் தூக்கி வீசுவதும் எதற்காக? மரண தண்டனையை விட ஆயுள் தண்டனை நல்லது என்பதை இந்தப் பந்தயம் நிரூபிக்குமா? இல்லை. இது எல்லாமே அர்த்தமற்றது. முட்டாள்தனம். எனக்கு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பம். அவனுக்கு கஷ்டப்படாமல் கிடைக்கும் பணத்தின் மீது பேராசை. அதுதான் இதுக்கு எல்லாம் அர்த்தம்.'

அவரது சிந்தனை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் ஊடாடிக் கொண்டிருந்தது. அந்த மாலைப் பொழுதில் நடந்தவை நினைவிலிருந்து தூசி போல உதிர்ந்தன.

வங்கியாளரின் தோட்டத்தில் உள்ள பங்களாவில் கண்காணிப்பு நிறைந்த ஓர் அறையில் அந்த இளைஞர் தனது சிறைவாசத்தை துவங்குவது என முடிவு செய்யப்பட்டது. 15 வருடங்களுக்கு எந்த மனிதரையும் பார்க்கக் கூடாது, மனிதக் குரல்களைக் கேட்கக் கூடாது, வெளியிலிருந்து எந்த கடிதமும் பெறவோ, செய்தித் தாளோ படிக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது. ஆனால் குடிக்கலாம், புகைக்கலாம், புத்தகம் படிக்கலாம், கடிதம் எழுதலாம், இசைக் கருவி வாசிக்கலாம். வெளியுலகுடன் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரே தொடர்பு சிறிய சாளரம் மட்டுமே. அது பந்தயத்தின் விதிமுறை.  அவருக்குத் தேவையான மது, சுருட்டு, புத்தகம், இசைத்தட்டு என்று எதையும் ஒரு சிறிய சீட்டில் எழுதி அனுப்பலாம். அவற்றை அந்த சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே பெற முடியும்.

அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு வரியும் மிக நுணுக்கமாக எழுதப்பட்டிருந்தது. நவம்பர் 14, 1870- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்குத் துவங்கி நவம்பர் 14, 1885- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு கடுங்காவல் மிகுந்த தனிமைச் சிறைவாசம் முடிகிறது. இந்த விதிமுறைகளை மீறுவதற்கு அந்த இளைஞர் செய்யும் மிகச் சிறிய முயற்சி கூட பந்தயத்தில் தோல்வியடைந்ததைக் குறிக்கும். கடைசி நாளில் கடைசி 2 நிமிடங்கள் இருக்கும் போது கூட அவர் விதியை மீறினால் வங்கியாளருக்கு 2 மில்லியன் ரூபிள் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதும் ஒரு விதி.

சிறைவாசத்தின் முதலாண்டில், தனிமையும் மன அழுத்தமும் அந்த இளைஞரை  வாட்டி வதைக்கின்றன என்பதை அவர் எழுதி அனுப்பிய சிறு குறிப்புகள் மூலம் உணர்ந்தேன். அவரது அறையிலிருந்து பியானோவின் இசையொலி இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருந்தது. புகையிலையையும், ஒயினையும் அவர் மறுத்துவிட்டார். ஒயின் ஆசையை அதிகரிக்கிறது. ஆசையே ஒரு கைதிக்கு மிகப் பெரும் துன்பமிழைக்கும் எதிரி.  குடிப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதையும் விட மிகத் துன்பமான செயல் இல்லை. சுருட்டுப் பிடித்தால் அந்த அறையில் எழும் புகையால் காற்று மாசடைந்துவிடும். அதனால் அதுவும் வேண்டாம் என்று அந்த இளைஞர் ஒதுக்கினார்.  முதல் வருடத்தில் எளிமையான காதல் கதைகள் கொண்ட நாவல்கள், புத்தகங்கள், வீரதீர சாகசக் கதைகள் கொண்ட புத்தகங்களைப் படித்தார்.

இரண்டாம் ஆண்டில் அந்த அறையிலிருந்த பியானோ அமைதியாக இருந்தது. அந்த சிறைவாசி தனக்கு செவ்வியல் இலக்கியங்கள் வேண்டும் என்று கேட்டுப் பெற்றார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஐந்தாவது வருடத்தில் அந்த அறையில் மீண்டும் பியானோ இசைத்தது. குடிப்பதற்கு ஒயின் பெற்றுக் கொண்டார். அவரைப் பற்றி அறிந்தவர்கள், அந்த இளைஞர் அறையில் எந்நேரமும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் என்றும், சாப்பிடுவது, தூங்குவது, குடித்துக் கொண்டு, கோபமாக தனக்குத் தானே கத்திக் கொண்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. இரவு முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் விடிகாலையில் அவற்றைக் கிழிந்து எறிந்தார். ஓரிருமுறை அவர் அழுததும் கேட்டது.

ஆறாவது ஆண்டின் பிற்பகுதியில் அந்த இளைஞர் புதிய மொழிகளையும், தத்துவம், வரலாறு ஆகியவற்றையும் வெறி கொண்டது போலப் படிக்கத் தொடங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 600 புத்தகங்களை அவர் படித்து முடித்தார். வங்கி அதிபர் தேடித் தேடி அந்தப் புத்தகங்களை அவருக்காக வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கால கட்டத்தில் வங்கியாளருக்கு ஒரு கடித்தத்தை சிறைவாசி அனுப்பினார்.

'மை டியர் ஜெயிலர், நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். அந்த மொழிகளைத் தெரிந்தவர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். அதில் ஒரு பிழை கூட இல்லையென்றால் உங்கள் தோட்டத்தில் நின்று வானை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுடுங்கள். அதன் மூலம் நான் எழுதியது சரிதான் என்றும் எனது உழைப்பு வீணாகவில்லை என்றும் அறிந்து கொள்வேன். வரலாற்றின் பக்கங்களில் வாழ்ந்த எந்தவொரு அறிவாளியும் பல்வேறு மொழிகளைத் தெரிந்திருக்கிறார்கள். அவற்றை நான் புரிந்துகொள்ளும் போது எனது ஆன்மா எவ்வளவு ஆனந்தம் அடைகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.'

சிறைவாசியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. வங்கி அதிபர் தோட்டத்தில் இருமுறை சுட உத்தரவிட்டார்.

பத்தாம் ஆண்டில் அவர் ஓரிடத்தில் அமர்ந்து நற்செய்தியை (Gospel) மட்டுமே படித்துக் கொண்டிருந்தார். ஒரு சில வருடங்களில் 600 புத்தகம் படித்த ஒருவர் ஓராண்டை அமைதியாகக் கழித்தது வியப்பாக இருந்தது வங்கி அதிபருக்கு. அதற்குப் பின் இறையியலும், மதங்களின் வரலாறும் பற்றிய புத்தகங்களைப் படித்தார்.

கடைசி இரண்டு வருடங்களில் ஏராளமான நூல்களை வகை தொகை இல்லாமல் வாசித்தார்.  ஒரு சமயம் இயற்கை அறிவியல் நூல்களை வாசித்தவர், சில சமயம் பைரன், ஷேக்ஸ்பியர் நூல்களை கேட்டார். வேதியியல், மருத்துவம், நாவல், தத்துவம், இறையியல் ஆகிய நூல்களை வாசித்து தீர்த்தார். கடலில் உடைந்து போன கப்பலில் இருந்து சிதறிய கட்டைகளை ஒவ்வொன்றாய் பிடித்து உயிர் தப்ப நினைக்கும் ஒரு மனிதனைப் போல புத்தகங்களை படித்துக் கொண்டே இருந்தார் அந்த தனிமை  சிறை இளைஞர்.

நினைவுகளினூடே மிதந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்றார். நாளை 12 மணிக்கு அந்த இளைஞன் தனது சுதந்திரத்தை பெற்று விடுவான். ஒப்பந்தப்படி நான் அவனுக்கு இரண்டு மில்லியன் ரூபில்களை கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுத்தால் அதோடு நான் திவால் தான். எல்லாம் அதோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரிடம் எண்ணி முடிக்க முடியாத அளவு பணம் இருந்தது. ஆனால் இன்று, கடன் அதிகமா சொத்து அதிகமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பக் கூட அவருக்கு அச்சமாக இருந்தது. வெறித்தனமாக பங்குச் சந்தையில் சூதாட்டம் போல ஈடுபட்டதும்,  கண்மூடித்தனமான ஊக வணிகத்தில் இருந்து வெளியே வரக்கூட முடியாத சூழலும் அவருடைய சொத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்தன. பெருமை கொண்ட நெஞ்சமும், அச்சமின்மையும், தன்னம்பிக்கையும்  கொண்ட வங்கியாளர் தனது முதலீடுகள் ஒவ்வொரு முறை ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும் நடுக்கம் அடைந்தார்.

"நாசமாய் போன  பந்தயம்..." என்று மனம் தளர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்தார் அந்த வயோதிகர். "அந்த இளைஞன் ஏன் சாகவில்லை?. அவனுக்கு நாற்பது வயதுதான் ஆகிறது. என்னிடமிருக்கும் கடைசி பணம் வரை அவன் வாங்கிக் கொண்டு, நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்வான். வாழ்க்கையை அனுபவிப்பான். பங்கு சந்தையில் விளையாடுவான். அதே நேரம் நான் அவனை பொறாமையோடு ஒரு பிச்சைக்காரனை போல பார்த்துக் கொண்டிருப்பேன். 'எனது வாழ்வின் மாபெரும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு உதவட்டுமா' என்று என்னை பார்த்து ஒவ்வொரு நாளும் அவன் கேட்பான். அய்யோ இது நடக்கக் கூடாது. அவமானத்திலிருந்தும் திவால் ஆவதில் இருந்தும் நான்  தப்பிக்க இருக்கும் ஒரே வழி அந்த இளைஞனின் மரணம் தான்."

மணி மூன்றடித்தது. அந்த வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தனர். வெளியே பனிக் காற்றுக்கு மரங்களின் அசைவோசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பதினைத்து ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த சாவியை சத்தமில்லாமல் எடுத்து தந்து கோட் பாக்கட்டில் வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார் வங்கியாளர்.

தொடரும்... 

Thursday, March 3, 2011

சுழற்பந்து



"வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச் செய்வோம். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டு விட்டு பந்தை சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட் பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான் மதியழகன்.

அவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில் இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள்ளை அடிப்பதற்கோ அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வர்.

ஆனால் கணேசா கபே என்று சொல்லக்கூடிய ஒரு பாய்லர், சில கண்ணாடி டம்ளர்கள், ஓலைக் குடிசை, கால் உடைந்ததால் இருபுறமும் செங்கல் அடுக்கி அதன் மீது பாங்காக வைக்கப்பட்ட பழைய மரப் பலகை, மேலே கிடக்கும் கசங்கி படிக்க லாயக்கற்ற அன்றைய செய்தித் தாள் மற்றும் சில வறண்ட வடைகளைக் கொண்ட டீக் கடையில் இப்படி வேலை வெட்டி இல்லாத அல்லது வெட்டி வேலை செய்யும் ஒரு 15 பேர் தினமும் அரட்டை அடிப்பதை கவனிப்பதற்கு அந்த ஊர் மக்களுக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை.

"எவனாவது உருப்படற மாதிரி இருக்கறானா பாருங்க... அத்தன பேரும் வேலைக்குப் போகாம எப்பப் பார்த்தாலும் டீக் கடையில உக்காந்துட்டு அரட்டை... ஏதோ உலகத்தையே புரட்டுற மாதிரி மீட்டிங்கு...எல்லாம் இவனுங்க அப்பன், ஆத்தாளச் சொல்லோணும்' உரக் கடை ராசுவிடம் புலம்பிச் சென்றார் பால்காரர் மணி.

"ஏண்டா மதி, நீ சொல்ற மாதிரி செஞ்சா நமக்கு வேண்டியது கிடைக்குமாடா?'- இது எங்கே நடக்கப் போகிறது என்ற தொனியில் கேட்டான் சுரேஷ்.

"ஆமா... போன முறை முத்துச்சாமிக்கு செஞ்சோம்... அவரும் புது பேட், கிட்ஸ் எல்லாம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு... ஆனா ஜெயிச்ச பின்னாடி என்னாச்சு... மனுஷன் ஒரு டீயாவது வாங்கித் தந்தானா?' கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தான் ராஜூ.

"இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆளுக்கு 100 ரூபா போட்டா நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக்கலாம். எதுக்கு இவனுகள பிடிச்சுத் தொங்கோணும்' என்றான் சிவா.

இல்லாட்டி அவருகிட்ட முன்னாடியே பணத்தை வாங்கிட்டா என்ன?...ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்லிக் கொண்டிருந்தனர்.
கவனமாகக் கேட்ட மதி பேசத் துவங்கினான். "அதெல்லாம் வேண்டாம். சுந்தரமூர்த்தி தான் இந்த முறை பஞ்சாயத்துப் பிரசிடன்ட்டுக்கு போட்டியிடுறார். எலக்ஷனுக்கு இன்னும் 15 நாள் இருக்கு. அவருகிட்ட ஆதரவு கொடுக்கறோம்னு சொல்லி பிரசாரம் செய்வோம். அதுக்குப் பிரதிபலனா நம்ம டீமுக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கறது அப்படின்னு ஒரு டீல் போட்டுக்குவோம். முன்னாடியே பணம் வாங்கிட்டம்னா அப்புறம் வேணுங்கிற போது நாம் போய் நிற்க முடியாது'.

"எந்தக் காலத்துலடா இருக்கிற நீ. எந்த அரசியல்வாதியாவது சொன்னதச் செஞ்சுருக்கானா? இவரு மட்டும் என்ன யோக்கியமா. தேர்தலுக்கு முன்னாடியே கழுத்துல துண்டப் போட்டு வேணுங்கிறத கறக்கணும்..அதுதான் நமக்கு சேஃப்'- இது சுரேஷ்.

எல்லோருக்கும் ஆறிப்போன டீ வந்தது. கடை பூட்டும் நேரமாகி விட்டது என்பதற்கு அதுவே சாட்சி. டேய் கணேசா மணி 9 ஆயிடுச்சா என்றபடியே டீயை உறிஞ்சினார்கள். கடைய பூட்டறேன்...எல்லாரும் கிளம்புங்கடா என்று வாய் தவறி சொல்லி விடக் கூடாது என்பதற்காக டீக் கடை கணேசன் செய்யும் வித்தைகளில் ஒன்று ஆறிப்போன டீ.

மறுநாள் காலை அணியின் மொத்த வீரர்களும் சுந்தரமூர்த்தியை பார்த்து என்ன சொல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர்.

""டேய் மதி அங்க பாரு...அந்தாளு வர்றாரு...'' பிரசிடென்ட் வேட்பாளர் அவர்களை நோக்கி புல்லட்டில் வந்து கொண்டிருந்தார்.

"தம்பிகளா வணக்கம். பதில் வணக்கத்தை தேர்தல் நேரத்தில் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிந்ததால் அவரே தொடர்ந்தார். போன முறை நம்ம எதிர் பார்ட்டி ஜெயிச்சதுக்கு உங்க பிரசாரமும் ஓட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு எந்த பிரதிபலனும் அவர் செய்யலைங்கிறதும் எனக்குத் தெரியும். அதனால இந்த முறை உங்க ஆதரவு அவருக்கு இருக்காது. எனவே எனக்கு பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் அணிக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்கிறேன். என்னப்பா சொல்ற மதியழகா?'
"சோடா குடிக்காதது மட்டும்தான் பாக்கி...மூச்சு விடாம பேசுறாண்டா' மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மதி.

"சரிங்ணா..ஆனா ரெண்டு பேரும் நம்ம வார்டா போயிட்டீங்க...அவரும் நம்மகிட்ட வரல. போன முறை ஜெயிக்க வச்சதுக்கு ஒன்னும் பண்ணல. அதனாலகூட இருக்கலாம். நீங்க முதல்ல வந்துட்டீங்க. அணி வீரர்களிடம் பேசி முடிவு சொல்றேனே. அப்படியே டீ, வடை சொல்லீருங்க' என்று தாடியை தடவிக் கொண்டான்.

கணேசா கபேவுக்கு பின்னால் உள்ள பாறைக் குழிக்கு விரைந்தனர். "டேய் மதி...கொஞ்சமாவது அறிவு இருக்காடா...எவ்ளோ பெரிய மனுஷன் நம்மகிட்ட ஆதரவு கேட்கிறார்..பெரிய இவனாட்டம் பந்தா பண்ற...சரின்னு உடனே சொல்ல வேண்டியது தானே' செல்வராஜ் கோபப் பார்வை வீசினான்.
சட்டை பட்டனை கழட்டிவிட்டு பின்னால் இழுத்துக் கொண்டே பேசினான் மதி.

"நீ கொஞ்சம் சும்மா இருடா. நடக்கப் போறது பார்லிமெண்ட் எலக்ஷன் இல்லை. பஞ்சாயத்து எலக்ஷன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். முத்துச்சாமி, சுந்தரமூர்த்தி ரெண்டு பேரும் ஒரே வார்டு. ஒருத்தன் நம்மள முன்னாடி ஏமாத்துனவன். இவனும் நம்மள ஏமாத்திறக் கூடாது. மொத்தம் 4 வார்டு இருக்கு. அதுல 2000 ஓட்டு இருக்கு. எப்படியும் 1200 தான் விழும். ரெண்டு பேருக்குமே செல்வாக்கு இருக்கு. வெட்டியாத்தானே இருக்கிறானுக கூப்பிட்டா வந்துருவோம்னு நினைப்புல வந்திருக்கார். பிரசாரம் பண்ண பெருசா எவனும் வர மாட்டான். நம்ம பண்ற கேன்வாஸ்ல ஓட்டு எங்க வேணா விழும். அதனாலதான் நம்மளத் தேடி வந்திருக்கார். நாம கொஞ்சம் பந்தா பண்ணாதான் மதிப்பானுக. சரி நம்ம தேவையை அவரே சொல்லிட்டார். சரின்னு போய் சொல்லீற வேண்டியதுதான்' டீ, வடையை காலி செய்து விட்டு எல்லோரும் எழுந்தனர்.

எலக்ஷன் ரிசல்டை விட இவனுக என்ன ரிசல்ட் சொல்லப் போறானுகளோ என்ற எதிர்பார்ப்பில் பார்த்தார் சுந்தரமூர்த்தி. இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சில விநாடிகள் மெüனமாகப் பார்த்த மதி, "உங்களுக்குத் தான் பிரசாரம்னு முடிவு பண்ணியிருக்கோம்' என்றான். ரொம்ப சந்தோஷம் தம்பி..அப்ப இப்பவே ஆரம்பிச்சிடுவோம் என்றபடி புல்லட் நோக்கிச் சென்றார்.

"அண்ணா...எங்களுக்கு திருப்பூர்ல ஒரு மேட்ச் இருக்கு. அதுக்குப் போகணும். நாளைக்கு ஆரம்பிச்சிடலாமா? சுந்தரமூர்த்திக்கு தன் விதியை நினைத்து கடுப்பாக இருந்தது. முகத்தில் எதுவும் காட்டாமல் ஆகட்டும் தம்பி என்றார். அவர் போகும் முன் அணிச் செலவுக்கு 500 ரூபாய் வாங்க மதி மறக்கவில்லை.
மறுநாள் உங்கள் ஓட்டு சுந்தரமூர்த்தி அண்ணனுக்கே. உங்கள் சின்னம் பேனாக் கத்தி என்று மதியழகன் தலைமையில் பிரசாரம் விண்ணைப் பிளந்தது.

சுந்தரமூர்த்தி தனது சகாக்கள், அணி வீரர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அதுதான் பஞ்சாயத்து தேர்தலின் மகிமை. அதுதான் பிரச்னையும் கூட. யாருக்கு ஓட்டுப் போடுவது என்று வாக்காளர்கள் குழம்பித் தவித்தனர்.

இரவு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது மணி 10. "இப்படி வேலைக்குப் போகாம ஏண்டா ஊரச் சுத்திட்டு இருக்கற' தட்டில் சாப்பாடு போட்டபடி பேசினார் அம்மா. "நான் சும்மா சுத்தல. தேர்தல் பிரசாரத்துல இருக்கிறேன்.'

"ஆமா இவரு பெரிய எம்.பி. ஆகப் போறாரு' என்றார் கட்டிலில் படுத்திருந்த அப்பா.

"யாருக்கு பிரசாரம் பண்ணறீங்க?'

"நம்ம சுந்தரமூர்த்தி அண்ணனுக்குத் தான்.'

"ஏண்டா கொஞ்சமாவது ரோஷம் இருந்தா அந்தாளுக்குப் போய் பிரசாரம் பண்ணுவியா?' வெந்நீர் காலில் பட்டது போல கொதித்தாள் அம்மா. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

கேபிள் டி.வி. கனக்ஷனுக்கு பணம் வசூலிக்க வந்திருந்தார் சுந்தரமூர்த்தி. "ஏம்மா கற்பகம்...2 மாசமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்றியாமே...ஏன்?'
"உங்க கேபிள் டி.வி.யால ஒரு பிரயோசனமும் இல்ல. எப்ப பாத்தாலும் கோடு கோடா தெரியுது. இல்லாட்டி கட் ஆகுது. மாசத்துல 15 நாள் இப்படித்தான் தெரியுது. எதுக்குப் பணம் தரோணும்?'

"உங்க வீட்ல மட்டும் தான் இப்படி சொல்ற. மத்தவங்க வீட்டுல எல்லாம் நல்லா தெரியுது. பணம் கொடுக்க வக்கில்லைனா கனக்ஷன கட் பண்ணிக்கோ...வார்த்தைகள் எரிந்து விழுந்து தெருவில் உருண்டோடின.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சீரியல் பார்ப்பதை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவும் சளைக்காமல் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேச்சு முற்றி கையை ஓங்கியபடி அருகே வந்து போடி என்று கத்தினார் சுந்தரமூர்த்தி. எல்லோரும் ஒரு விநாடி அதிர்ந்து பார்த்தனர்.

அம்மா அழுது கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்தான் மதி. "நான் என்னமா பண்ணட்டும். டீம் பசங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. பிரசாரம் பண்ணாம இருக்க முடியாது' என்று சொல்லிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

தேர்தல் நாள். நமக்குப் பார்த்து ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் முத்துச்சாமியும் சுந்தர மூர்த்தியும். வெளியே வந்தவர்களிடம் யாருக்குப் போட்டீங்க என்று கேட்டு அங்கேய தமது வெற்றியை உறுதி செய்து கொண்டிருந்தனர்.

வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சூழ வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் பதிவான 1267 வாக்குகளில் தங்களுக்கு எவ்வளவு வரும் என்று சுந்தரமூர்த்தியும், முத்துச்சாமியும் தத்தமது பரிவாரங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மதியும் தோழர்களும் கைகளில் பட்டாசுடன் அமைதியாக இருந்தனர்.

முதல் சுற்று எண்ணிக்கை முடிவு வந்தது. 2 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் சுந்தரமூர்த்தி. 2வது சுற்றிலும் இதே நிலைமை. மூன்றாவது சுற்றில் சுந்தரமூர்த்தி உற்சாகத்துக்கு வேட்டு வந்தது. முத்துச்சாமி-499. சுந்தரமூர்த்தி-500.

4வது வார்டு ஓட்டு எண்ணப்பட்டது. முடிவு தெரிய நகம் கடித்தபடி சுந்தரமூர்த்தியும், எப்படியும் ஜெயிச்சுருவோம் என்று முத்துச்சாமியும் நின்று கொண்டிருந்தனர்.

நம்ம பசங்க 15 பேர் வீட்லயும் நமக்குத்தான். நூர்ஜஹான் வீடு, ராமசாமி, நசீர் பாய், கறிக்கடை சண்முகம், மெட்ராஸ்காரர் வீடு, நடுத்தோட்டம் பழனிசாமி வீடு, நம்ம பங்காளிக வீடு என்று தனக்குத் தெரிந்த எல்லோர் வீட்டு ஓட்டுக் கணக்கையும் மனதுக்குள் போட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி. எங்கேயாவது மிஸ் ஆயிடுச்சா? என்று யோசித்துப் பார்த்தார். எப்படியும் 2, 3 வித்தியாசத்துல ஜெயிச்சிருவோம். ஏம்பா நமக்கு பிரசாரம் பண்ணீங்களே ஓட்டுப் போட்டீங்களா என்று எல்லோரையும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். என்ன இப்படி கேட்கறீங்க. உங்களுக்குத்தாங்ணா போட்டோம் என்றான் மதி.

முத்துச்சாமி அன் கோ பட்டாசு வெடித்து கொண்டாடியது. நிரந்தர பஞ்சாயத்துத் தலைவர் வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முத்துச்சாமி-635, சுந்தரமூர்த்தி-632. மூன்று ஓட்டுகளில் தோல்வியுற்ற சுந்தரமூர்த்தி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். "இந்த முறையும் நமக்குத் தோல்விதானா, பேட், கிட்ஸ் எல்லாம் அவ்ளோதானா' என்று கேட்டுக் கொண்டனர்.

"வெற்றிக்கும் தோல்விக்கும் ஒன்று தான் வித்தியாசம். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சம்பவமாக இருக்கலாம்' மெல்லிய சிரிப்புடன் சொல்லிக் கொண்டான் மதியழகன்.

அதைக் கவனிக்காமல் எல்லோரும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.



நன்றி: தினமணி கதிர் ஜூன் 2009

Friday, February 4, 2011

வான்காவின் கண்




மஞ்சள், சிவப்பு, பச்சை
நீலம், வெள்ளை, கறுப்பு என
விழுந்து கிடந்தவனைப் பார்த்து
காதலித்தவனா என்றாள்.
காதலித்ததால்
காதழித்தவன் என்றேன்.
ஓவியமெங்கும்
ரத்தம் வடியும் கண்களாயின.

நன்றி: உயிரோசை 

Thursday, February 3, 2011

சாத்தாளின் அருள் மாளிகை







கடவுளா சாத்தாளா
என்ற கேள்வி  எழுந்தபோது
ஒரு நீலப்படம் பார்ப்பது என
அவர்களுக்குள் முடிவானது.

புழுதி பறந்த தார்ச்சாலையைக் கடந்து
தலை மறைத்துச்  சென்ற இடத்தில்
மழை குடித்து வெயில் தின்ற
சுவரில் முதலில்  தொங்கியது
சாத்தாளின் அந்தரங்க அருள் மாளிகை.


சாத்தாளைத் தரிசிக்க
வயதுக் கணக்கை கேட்டவனிடமிருந்து
விரல்களால் வரைந்து பெற்ற
வரைபடத்தில் நுழைந்தபோது
புகையும் நிணமும் அலைந்தபடி
அவள் புகழ் பாடிக் கொண்டிருந்தன.

யுகங் கடந்த வயோதிகன்
மரணத்தின் முகவரியை
அழித்து அழித்து எழுதியவன்
பெரு விருப்பு கொண்ட இளைஞன் என
எல்லோரது நரம்புகளிலும்
சாத்தாள் சாத்தாள் சாத்தாள் என
சொட்டுச் சொட்டாக
காமம் கடந்து சென்றது
பருத்தகன்ற ஸ்தனங்களுடன்.

கடவுள்கள் மயங்கி
நீலம் தவிர்த்த வண்ணங்கள்
கரைந்து போன பின்
சாத்தாளின் பார்வைகளையும்
முனகல்களையும் வளைவுகளையும்
தலையில் சுமந்தபடி
பெருங்காமத்தோடு
வெளியேறியவர்களிடம்
கேள்வியை வீசிச் சிரித்தனர்
சாத்தாளும் கடவுளும்.

நன்றி: உயிரோசை

Sunday, January 23, 2011

காதில் நுழையும் ரயில்



இருள் வடிந்த நேரத்தில்
பல் குச்சியுடன்
ரயில்பாதையோரம் போராடுகிறான்
அழுக்கில் வாசம் செய்யும்
பரட்டைத் தலைச் சிறுவன்.

தொலைவைத் தொலைத்து
வரும் ரயில்
காதில் நுழைவதை
எதிர் நோக்கி
புன்னகைத்து நிற்கிறான்
வாழ்வைப் பிளந்து செல்லக்
காத்திருக்கும் கிழவன்.

அதிர்வின் பேரோசையுடன்
செவியைக் கிழித்து
வெளியேறுகிறது ரயில்.

தாண்ட இயலாத பூனை கண்டு
மௌனத்தின் நாக்குகள் நீள
இருளை இழுத்துக் கண்ணில் போட்டு
மனதைக் கிடத்துகிறான் தண்டவாளத்தில்.

கணங்கள் கனத்து
காணாமல் போனபோது
ரயிலும் கிழவனும்
போய்விட்டிருந்தார்கள்.