பள்ளி இறுதியாண்டு வகுப்பு முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு சிறிய அச்சகத்தில் மதிய நேரங்களில் நான் வேலை செய்தேன். என் தாய் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனது முதலாளியுடனும் கவர்ச்சியான அழகுடைய அவரது மனைவியுடனும் மிகுந்த நட்புக் கொண்டிருந்தேன். அந்தப்
பெண்மணி எனது வீட்டுக்கு அவ்வப்போது வந்து சென்றதால் என் தாய் அவருக்கு
சிகை வெட்டிவிடவோ அல்லது அப்போதைய ஸ்டைலுக்கேற்றபடி சாயமடித்துவிடவோ
செய்தார். ஒரு
நாள் தனது கவிதைகளும் பிரசுரமாக வேண்டும் என்று நினைப்பவனைப் போல் அச்சுத்
தொழில் தொடர்பான விஷயங்களை ஆர்வத்துடன் நான் கற்றுக் கொண்டேன். அப்போது சிறிது காலத்துக்கு ஈய எழுத்துருக்களை அச்சுக் கோர்க்கும் பொறுப்பில் இருந்தேன். முதலாளியின் மனைவி செனோரா லியோனார் அச்சுக் கூடத்துக்கு வரும்போதெல்லாம், எழுத்துருக்கள்
வரிசை மாறியிருப்பதைப் பார்த்தால் அதை மீண்டும் சரியாக கோர்க்கும்படி
கூறுவார் என்பதால் எப்போதும் கவனத்துடன் வேலை செய்தேன். அவர் அருகில் இருக்கும் போதெல்லாம் ஒரு வித சலனத்தை என்னுள் ஏற்படுத்தியதை அவரும் நன்றாகவே அறிந்திருந்தார். குழந்தைப்
பருவத்தில் என் பொம்மைக் கார்களுடன் விளையாடும் போது அவரது கால்களிலோ
இடுப்பிலோ உரசுகையில் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகம் எனக்குப் புரியும்
முன்பே செனோரா லியோனாருக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோவென்று இப்போது
சந்தேகிக்கிறேன்.
வருடங்கள் கடந்த பிறகும் கூட அவரது அந்தச் சிரிப்பு அவரது கணவரின் அச்சுக் கூடத்தில் என்னை சிலிர்க்க வைக்கிறது. அச்சகத்துக்கு அவர் வருவது என்றாவது ஒரு நாள்தான் என்றாகிவிட்டால் அது என்னை மேலும் கலக்கமடைய வைத்தது. அந்த மாதிரியான சமயங்களில் எனது பருவ மனதில் தோன்றியதை கவிதை வரிகளாகக் கொட்டித் தீர்த்தேன். பின்னொரு
நாள் அந்தக் கவிதைகளை அச்சுக் கோர்க்கும் கட்டைக்கு மாற்ற வேண்டும் என்ற
எண்ணத்தில் ஒரு நாள் வேலை செய்யும்போது அதை எடுத்து ஒளித்து வைத்தேன். அதைச் செய்யாதே என என் மனம் அப்போது தடுக்கவில்லை.
இப்படியே மாதங்கள் கடந்தன. என் பள்ளி இறுதியாண்டுப் படிப்பும் கூட முடிவுக்கு வந்தது. அந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் முதலாளி கூறியபடி, அதிகப் பொறுப்புடனும் அதிக சம்பளத்துடனும் முழு நேர ஊழியருக்குண்டான மரியாதையுடன் எனது பணி மாறியது. அவரது
மனைவி கோடை வெயிலின் உக்கிரத்தைச் சாக்காக வைத்து அறுபதுகளின்
இறுதியாண்டுகளில் அணியப்பட்ட குட்டைப் பாவாடை போன்றும் குட்டையான சிவப்பு
நிறக் கூந்தல் அலங்காரத்துடனும் அடிக்கடி அச்சுக் கூடத்துக்கு வந்து செல்ல
ஆரம்பித்தார். அந்த சிவந்த கூந்தலாலும் அவரது வெளிறிய மேனியாலும் தூண்டப்பட்டு, நான் எழுதிய எழுத்துகளெல்லாம் ஆகச் சிறந்த கவிதைகளானது மட்டுமல்ல நீளமானவையாகவும் இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
எவ்வித நெருடலும் இல்லாமல் அவரிடம் காட்டுவதற்காக நான் அச்சுக் கோர்த்தது ஒரே ஒரு கவிதை மட்டும்தான். அவரிடம் அதைக் கொடுக்க ஆயிரம் வழிகளில் சிந்தித்தேன். அதற்கு அவரது ஒரே பதில், என் கன்னத்தில் ஒரு முத்தமிடலாகவோ அல்லது விரல் நகங்களால் தாடையை தொடுவதாகவோ தான் இருக்கும் என்று கற்பனை செய்தேன்.
மிகச் சரியாக ஒரு நாள் மதிய நேரம் அதற்கு வாய்த்தது. அது எப்போதும் அவர் வரும் வியாழக்கிழமை. அவரது கணவர் சில அச்சுக் காகிதங்கள் எடு்த்துவர வெளியே சென்றுவிட்டார். கோடை வெயிலில் வெளிறிய தோற்றத்துடன் சிவந்த கூந்தல் முடிந்து குட்டைப் பாவாடையுடன் செனோரா லியோனார் வந்தபோது, நான் கோர்த்து வைத்த என் கவிதையின் மீது மை பூசி அச்சடித்தேன். அப்போது அவர் என்ன சொன்னார் என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. என்னை அழைத்து கடையின் கதவை தாழ்போட்டு விட்டு பின்பக்கம் வரும்படி அவர் கட்டளையிட்டது மட்டுமே நினைவில் உள்ளது.
என் முன்னே நின்று, வைத்த கண் வாங்காமல், நான் நன்கறிந்த அந்த மெல்லிய சிரிப்பை உதிர்த்தார். பின்னர் என்னை முத்தமிட்டார். எனது கையை வழிநடத்தி அவர் உடலில் பரவச் செய்தார். குட்டைப் பாவாடையை தளர்த்தி உள்ளாடையை தளர்த்தச் செய்து உள்ளே பார்த்த கணத்தில் நான் உறைந்து போனேன். உடலின் கிளர்ச்சியான தூண்டலில் வெறியேறிய மனநிலையிலிருந்த நான் அவரை அப்படியே தள்ளிச் சென்று என் டேபிளின் மீது கிடத்தினேன். அவர் மீது ஏறி அப்படியே படர்ந்தேன். காமம் நிறைந்த கவர்ச்சியான செனோரா லியோனார் மோகத்தால் என்னை அணைத்து கிளர்ச்சியால் அதிரச் செய்தார்.
மன திருப்தியும் உணர்வும் எங்களைப் பிரிக்கும் வரை நாங்கள் அப்படியே வெகு நேரம் கிடந்தோம். மேசையிலிருந்து அவர் மேலே எழுந்தபோதுதான் என் கவிதையின் தலைவிதியை அறிந்து கொண்டேன். என் கவிதை அப் பெண்மணியின் புட்டத்தில் அச்சேறியிருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் அவரது கீழ் இடுப்பில் மிகத் தெளிவாகத் துவங்கிய என் கவிதை, விரிந்தபடியே இறங்கி அகன்ற பெரிய பிருஷ்டத்தில் உருமாறி கரைந்து வெறும் மை மட்டுமே தெரிந்தது. எனக்கு நானே விளக்கம் அளிக்க முயற்சித்தாலும், அந்த சமயத்தில் நான் ஏன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று இதுநாள் வரை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மேலெழுந்து உடையணிந்த பின்னர் அன்பான ஒரு முத்தமிட்டபடி விடை பெற்றார்.
எனது கவிதை வரிகளின் ஈய எழுத்துருக்களை அந்த அச்சுக் கட்டையில் மீண்டும் ஒருமுறை கோர்க்க முடிந்தது அப்போது மட்டுமே. ஒரு
வேளை எதிர்காலத்தில் மற்றொரு வேலையில் சேர்ந்தபின் ஓய்வாக இருக்கும்போது
வேறு கவிதைகளை நான் எழுதக்கூடும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
http://www.theparisreview.org இணையதளத்தில் வெளியான ரிகார்டோ சுமலாவியா எழுதிய First Impressions என்ற சிறுகதையின் ஆங்கில வழி தமிழாக்கம்: க.ரகுநாதன்